கோம்பை சார்ந்த பதிவுகள்
கனத்த இரவு கண்ணீரில் நனைந்தது
கோம்பையில் கடலைப் பம்பல்;
தூரத்துக் கிராமங்களில் இருந்தெல்லாம்
பிள்ளைகுட்டிகளை இழுத்துக் கொண்டு
குடும்பங் குடும்பமாய்
வந்து சேர்வர் கூலிச்சனங்கள்-
கேப்பைச் சூட்டினை நோக்கிவரும்
எலிகளைப் போல
மந்தைப் புளிய மரங்களுக்கடியில்
இடிந்து கிடக்கும் திண்ணைகளில்
சாவடிப் படிகளில்
மூட்டை முடிச்சுகளுடன் கிடைபோடுவர்
பருவகாலப் புட்களைப் போல
ஓடையில் கல்லெடுத்து
வீதிகளில் அடுப்புக் கூட்டி
இரவெல்லாம் சமைப்பர்;
சுற்றிச் சட்டிகளைத் துடைத்து
தலையில் வைத்துக்கொண்டு
காடுகளுக்குக் கிளம்புவர்
பெருகிப் பொங்கும் சுனைநீர் போல
வேட்டு வைத்து உடைத்த பாறைகளைப் போல
துருத்திக் கொண்டிருக்கும் சுக்கான் பாதைகளில்
அரைத் தூக்கத்தில் இருக்கும் பிள்ளைகளை அடித்திழுத்துக் கொண்டு
ஆட்கள் போகும்வழியே ஓடுவர்
அம்புகளைப் போல
காட்டில் கால் வைக்கும் போது
கிழக்கே சாலைமலைக்குப் பின்னால்
சன்னமாய் விலகும் இருள் -
தூக்கத்தில் முறுவலிக்கும்
குழந்தையின் உதடுபோல்
காட்டு ஓடையில் ஒதுங்கிக்
கள்ளி மரத்தடி மண்ணில் பல் துலக்கி
ஒருசேரத் தண்ணிரீல் கொப்பளித்து
முகம் தடவி
ஓடி ஓடிச் செடி பிடுங்குவர்
கிளித்தட்டு விளையாடும் சிறுமிகள் போல
வாயலுங்காமல் பருப்புகளைத் தின்பர்
பிஞ்சுகளை மென்று தாகம் தணிப்பர்.
ஆய்ந்த கடலையை அளந்து போட்டுக்
கூலி வாங்கி வழிகூடுவர்
தங்குமிடம் நோக்கி.
இரவெல்லாம் சோறாக்கி
மீண்டும் காடு ஏகுவர்.
செக்கு மாடுகள் இந்த ஜீவன்கள்?
தரும் புழுதியில் விழுந்து கிடக்கிறார்களே
வெட்டிப் போட்ட கட்டைகள் போல
வீசி எறிந்த கொட்டைகள் போலச்
செக்கு மாடுகள் இந்த ஜீவன்கள்?
இப்படித்தான்
முகம் பாரா பூம்பிஞ்சையும்
சவலப் பிள்ளையையும் சுமந்துகொண்டு
மாரியப்பனும் காளியம்மையும்
கடலைப் பம்மலுக்கு வந்தனர்-
தேய்ந்து அறிந்து
பாரக் கயிறுபோல அவன்...
நைந்து கிழிந்த
பழைய சேலைபோல் அவள்...
வறுமை எழுதிய சித்திரங்களாய்
நால்வரும்....
புகையிலைக் கூளத்தை ஒதுக்கியபடியே
செடி சேர்த்துக் குவித்தான் மாரியப்பன்...
பச்சைப் பருப்பைத் தின்னும் சவலையைக்
கிள்ளி,அடித்து,தள்ளிவிட்டு,
திட்டிக்கொண்டே
கடலையை ஆய்ந்தாள் காளியம்மை
மடிக்குள் உறங்கியது பூம்பிஞ்சு
அது விழிக்கவே இல்லை என்பதைத்
திரும்பி வரும்போதே உணர்ந்தாள்.
உடன் வேலைக்காரர்கள் முன்னே போய்விட
துணையில்லா அந்த இரவில்
ஓடைக்கரையின் செம்மண்மேட்டில்
மாரியப்பன் குழிவெட்டினான்
உயிரைப் பிடுங்கிப் போட்டதுபோல
பூம்பிஞ்சை இட்டாள் காளியம்மை
மண்ணைத் தள்ளி மெத்திக்கொண்டே
வாய்விட்டழுதனர் மூவரும்
விராலிச் செடியும்
வீசும் காற்றையும் தவிர
வேறு எவரும் அங்கில்லை.
கனத்த இரவு அவர்தம்
கண்ணீரால் நனைந்தது.
No comments:
Post a Comment